முள்ளும் மலரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியவர் இயக்குநர் மகேந்திரன். இவர், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, நண்டு, பூட்டாத பூட்டுக்கள், மெட்டி, கை கொடுக்கும் கை, சாசனம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் கதாநாயகர்களை நம்பி இயக்குநர்கள் படங்களை இயக்கிய காலகட்டத்தில், மகேந்திரன் தனது கதையை மட்டும் நம்பி சினிமா பயணத்தை தொடங்கினார்.
அவர் இயக்கிய உதிரிப்பூக்கள் திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் மூலம் வெற்றி பெறும் படங்களின் பார்முலாவை மாற்றி அமைத்தார். யார் வெற்றி பெற்றாலும் அதில் கதை இருக்க வேண்டும், கதை இல்லாமல் நாயகன் இல்லை என்பதை நிரூபித்து காட்டினார். உதிரிப்பூக்கள் உலக சினிமா கொண்டாடும் படமாக இன்று வரை பயணிக்கிறது.
காலகட்டத்திற்கு ஏற்றார்போல் புதுப்புது இயக்குநர்கள் வந்தாலும் மகேந்திரனின் படங்களை பாடங்களாக படிக்காமல் இருக்க முடியாது. இன்றளவும் தனது கருத்தை திணிக்காமல் கதைக்காக பயணிக்கும் சினிமா இயக்குநர்கள் குறைவுதான். இயக்குநர் மகேந்திரன் நடிகர் ரஜினிகாந்திற்கு பிடித்தமான இயக்குநர் மட்டும் அல்ல நெருங்கிய நண்பரும் ஆவார்.