92வது விமானப்படை தின கொண்டாட்டம்: தாம்பரத்தில் நடந்த வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை - 92nd Indian Air Force Day
Published : 6 hours ago
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை ஒட்டி நாளை (அக்.06) சென்னை மெரினாவில் விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 8ஆம் தேதி தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும், 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இந்திய விமானப்படையின் வான் சாகசங்கள் நடைபெற உள்ளது.
அது மட்டுமின்றி, 92 ஆண்டு கால நினைவுகளை கூறும் வகையில் இந்த ஆண்டு சிறப்பாக விமானப்படை வான் சாகசங்கள் நடைபெற உள்ள நிலையில், ஈ.சி.ஆர் - கோவளம் கடற்கரையில் இருந்து INS அடையாறு வரை வான்வழி சாகசங்களை மக்கள் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை கடற்கரையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று (அக்.05) தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகையும் மற்றும் ஹெலிகாப்டர் சாகச ஒத்திகையும் நடைபெற்றது.