தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஆசி வழங்கிய தருமபுரம் ஆதீனம் - 11th student result - 11TH STUDENT RESULT
Published : May 14, 2024, 5:52 PM IST
மயிலாடுதுறை: பிளஸ் 1 பொதுத்தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 10,319 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 8,915 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 86.39 சதவீதம் பெற்று மாவட்ட அளவில் 35 வது இடத்தை மயிலாடுதுறை மாவட்டமானது பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 83.70 சதவீதமாக இருந்த நிலையில் நிகழாண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனிடையே மாவட்ட அளவில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பள்ளியில் பயின்ற மாணவி விஜயலட்சுமி 591 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், தங்கள் பள்ளியில் அடிக்கடி தேர்வுகள் வைத்ததால் தான் நன்றாக படித்து பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடமும், பதினோராம் வகுப்பில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றதாக தெரிவித்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண் பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளதாகவும்,தானும் ஒரு ஆசிரியர் ஆவதே தனது லட்சியம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து ஆதினத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு சென்று தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் அருளாசி பெற்றனர்.