தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் தெருநாய் மீது கார் ஏற்றிக் கொன்ற நபர்.. சிசிடிவி காட்சி வைரல்! - a man killed a street dog by car

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 11:06 PM IST

Chennai

சென்னை: சென்னை அசோக் பிருந்தாவனம் நகரில் வசிப்பவர் லட்சுமி நாராயணன். இவர் ஐயப்பன்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "கடந்த 19ஆம் தேதி அன்று நான் வீட்டில் இருக்கும் பொழுது திடீரெனத் தெருநாய் வெளியே அலறும் சத்தம் கேட்டது. உடனடியாக ஓடிச் சென்று பார்த்த போது நாயை ஒரு கார் இடித்துவிட்டு வேகமாகச் சென்றதைக் கண்டேன். அப்போது, நானும் என் குடும்பத்தினரும் குரல் கொடுத்தும் அந்த கார் நிற்காமல் சென்றது. 

இதையடுத்து, அருகே வசிக்கும் திவாகர் என்பவரை விசாரித்த போது, அந்த கார் ஜவகர் என்பவருடையது. அவர் தனக்குத் தெரிந்தவர் தான் என்று கூறினார். பின்னர் ஜவகருக்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தேன். அவர் தான் நாயைத் தெரியாமல் இடித்து விட்டதாகவும், ரிவர்ஸ் எடுக்கும் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறினார். 

மேலும், நாயைத் தானே அடக்கம் செய்து விடுவதாகவும் பணிவாகக் கேட்டார். இந்நிலையில், புதைப்பதற்காக நாயின் சடலம் ஜவஹரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், ஜவஹரின் பேச்சில் முன்னுக்குப் பின் முரணான தகவல் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் தனது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியைச்‌ சோதித்துப் பார்த்தபோது அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. 

அதில், ஜவஹர் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது இடிக்கவில்லை. அவர் வேண்டுமென்றே நாயின் தலையில் காரை ஏற்றிக் கொன்றது சிசிடிவி காட்சிகளில் தெளிவாகத் தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details