திருநெல்வேலி:திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 60 வயதான மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன், ஒவ்வொரு பண்டிகை காலங்களுக்கும் ஏற்றாற்போல் களிமண்ணில் பல்வேறு வேலைப்பாடுகளை செய்து வருகிறார்.
இவர் 40 வருடங்களுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது களிமண்ணில் நாவல் மரம் மற்றும் நெல்லிக்காய் மரத்தின் விதைகளை வைத்து களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய வேல்முருகன் “ இந்த சிலைகள் 100 ரூபாயிலிருந்து ஆரம்பித்து ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இந்த இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை விநாயர்கள் சிலைகளின் விற்பனை அமோகமாக இருக்கிறது.
இந்த முறையில் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுப்புற சூழலில் எந்தவித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. இந்த சிலைகளுக்குள் நாவல் மற்றும் நெல்லிக்காய் விதைகளை வைத்து தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த சிலைகளை கரைக்கும்போது அந்த விதைகள் ஆற்றங்கரை ஓரங்களில் விழுந்து முளைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
தமிழக அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி இந்த களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் மாவட்டம் முழுவதும் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 3 மாதங்களாக இந்த விதை விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.