தமிழ்நாடு

tamil nadu

சவுக்கு சங்கர் போல் சிக்குகிறாரா சீமான்? வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி வருண் குமார்! - Trichy SP Legal Notice To Seeman

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 8:43 PM IST

Seeman Audio Issue: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தனது 'X' வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

திருச்சி எஸ்.பி வருண் குமார் மற்றும் சீமான்
திருச்சி எஸ்.பி வருண் குமார் மற்றும் சீமான் (Credits - Varun Kumar and Seeman 'X' page)

திருச்சி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் வேட்பாளராக அந்த கட்சியின் நிர்வாகி காளியம்மாள் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தும் அவர் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான காளியம்மாவை சீமான் அநாகரீகமாகப் பேசியதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அதுமட்டும் அல்லாது, அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த ஆடியோவை, நாம் தமிழர் கட்சியினர் பலரும் இதை சீமான் பேசவில்லை என்றும், இது ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி வதந்தியை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் கூறி மறுப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் காளியம்மாள் இதுகுறித்து எந்தவொரு மறுப்போ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்தான், காளியம்மாவை அநாகரீகமாகப் பேசியது பற்றி வெளியான ஆடியோவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டம் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "நீ உக்காந்து ஆடியோ வெளியிடு. ஐ.பி.எஸ். படுச்சுட்டு எஸ்.பி, டி.சி ஆகுறதெல்லாம் எதுக்கு? சீமான் யார்ட்ட பேசுரான்? என்ன பன்னுரான்னு பாக்குறதா உன் வேலை?

திடீரென இவங்களுக்கு காளியம்மா மீது ஒரே பாசம். அவர் தான் மயிலாடுதுறைல போட்டியிட்டாரே? அப்போவே, காளியம்மா.. காளியம்மானு.. வேலை செஞ்சு ஜெயிக்க வெச்சுருக்க வேண்டியது தானே? நாங்கள் பிசுறுன்னு சொல்லுவோம்; அப்புறம் உசுறுன்னு சொல்லுவோம். அதுல உனக்கு என்ன பிரச்சனை? இது என் கட்சிப் பிரச்சனை" என்று தகாத வார்த்தைகளாலும், ஒருமையிலும் சீமான் பேசினார்.

இந்த நிலையில், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் அநாகரீகமாகப் பேசியதாகக் கூறி தனது வழக்கறிஞர் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தனது 'X' வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுமட்டும் அல்லாது சீமான் பேசிய வீடியோவை சுட்டிக்காட்டி, "தமிழ்நாட்டு மக்கள் பொதுவெளியில் இப்படிப்பட்ட வெறுப்பு பேச்சுகள் உள்ள ஒரு மொழியை சகித்துக் கொள்ளமாட்டார்கள்" எனவும் வருண் குமார் தனது 'X' வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:வன்னியர் இட ஒதுக்கீடு; 'தமிழக அரசு இப்படியான நாடகங்களை நடத்துவது நியாயமா?' - பாமக பாலு கேள்வி

ABOUT THE AUTHOR

...view details