மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடியில் பள்ளிவாசல் அருகே புதிதாக கட்டப்பட்ட மதரஸா கட்டடம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பாஜகவின் மதவாத அரசியல் எடுபடாது: மேடையில் பேசிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, "பாஜக தனிப்பெருமாண்மையோடு இல்லை, மைனாரிட்டி ஆட்சியில் தான் நடக்கிறது. அவர்கள் சில கட்சியின் ஆதரவோடு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும்போது, இதுபோன்ற சர்ச்சையான சட்டங்களை கொண்டு வந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களின் எதிர்ப்பையும் பெற்று, ஆதரவில்லாமல் ஆட்சியை இழக்கக்கூடிய நிலை கூட ஏற்பட்டு விடும். அதனால் பாஜக இது போன்ற மசோதாக்களை சட்டமாக மாட்டார்கள்.
மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், இதுபோன்று பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் நிறைவேற்ற போகிறோம், வக்பு சட்டத்தை நிறைவேற்ற போகிறோம் என்று சொல்லி இதன் மூலமாக சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றும்போது, பெரும்பான்மையினரின் ஆதரவை பெற்றுவிடலாம், வாக்குகளை பெற்று விடலாம் என்பது பாஜகவின் திட்டம்.
சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று பிரித்து அரசியல் செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதற்கு எதிராக உள்ளவர்கள் இந்திய மக்கள் என்பதை அயோத்தி உள்ளடக்கிய வைசாபாத்தில் உணர்த்திவிட்டார்கள். மதத்தை வைத்து செய்யக்கூடிய பாஜகவின் மதவாத அரசியல், வரக்கூடிய காலங்களில் எடுபடாது" எனக் கூறினார்.