தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சுங்கத்துறை செயல்பாடுகளால் இஸ்லாமியர்கள் திருச்சி விமான நிலையத்தை தவிர்க்கின்றனர்" - துரை வைகோ பரபரப்புப் பேட்டி! - DURAI VAIKO

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களுக்கான பிரத்யேக தொழுகை அறையை நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திறந்து வைத்தார்.

இஸ்லாமியர்களுக்கான தொழுகை அறையை திறந்து வைத்த துரை வைகோ எம்பி
இஸ்லாமியர்களுக்கான தொழுகை அறையை திறந்து வைத்த துரை வைகோ எம்பி (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 12:29 PM IST

திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் இஸ்லாமிய பயணிகள் தொழுவதற்கான பிரத்யேக தொழுகை அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை திருச்சி எம்பி துரை வைகோ இந்று திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் அங்கு தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாததால் நல்ல பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், அவர் கூறியதாவது:

ஃபெஞ்சல் புயல் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டு தனிநபர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பேரிடர் நிதியாக ரூ.6675 கோடி கேட்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. நாட்டிலேயே சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தை மிகச் சிறப்பாக நிறைவேற்றிய மாநிலம் தமிழ்நாடு தான். ஆயினும் திட்டத்திற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2000 கோடியை இதுவரை வழங்கவில்லை. திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி வழங்கிட வேண்டும்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் இந்த பணிகளுக்கான நிதியை மத்திய அரசு தாமதமாக வழங்கியது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம். மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்துவோம்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு கையாளும் திறன் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் பெரும்பாலும் சிறிய ரக விமானங்கள் வந்து செல்வதால் சரக்குகளை அதிகம் கையாளமுடியாத சூழல் நிலவுகிறது. எனவே பெரிய ரக விமானங்களை இயக்குமாறு விமான நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

திருச்சி விமான ஓடுதள விரிவாக்கத்திற்கு பிறகு பெரிய ரக விமானங்கள் வருவதன் மூலம் கார்கோ பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.திருச்சி விமான நிலையத்தில் விமான கட்டணங்கள் கூடுதலாக உள்ளதாக பரவலாக கூறப்படுகிறது. இதனால் சென்னை, பெங்களூர் விமான நிலையங்களை நாடி பயணிகள் செல்கின்றனர்.

இண்டிகோ மட்டுமே உள்நாட்டு சேவையை வழங்கி வருகிறது. ஏர் இண்டியா நிறுவனத்திடம் உள்நாட்டு சேவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே இந்த நிலை மாறும்.இண்டிகோ விமான சேவை திருப்திகரமாக இல்லை .சேவை குறைபாடு உள்ளது. விமான கட்டணமும் கூடுதலாக உள்ளது.

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளது. அவர்களால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பயணிகள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர். இதனால் பயணிகள் பலரும் திருச்சி விமான நிலையத்தை தவிர்க்கின்றனர். ஒரு சில அதிகாரிகளின் செயல்பாடுகளால் திருச்சி விமான நிலையத்திற்கு இந்த அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளேன்.

இலவசங்கள் குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் தேர்தல் வாக்குறுதியாகமகளிருக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. இந்த சூழலில் அண்ணாமலை இலவசங்கள் குறித்து எவ்வாறு விமர்சனம் செய்யலாம்? ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை மீது சிலர் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் அந்த நம்பிக்கை எல்லாம் தற்பொழுது தவிடு பொடியாக உள்ளது. நாளுக்கு நாள் அவரின் செயல்பாடுகளும் அறிக்கைகளும் மோசமாக சென்று கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details