திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் இஸ்லாமிய பயணிகள் தொழுவதற்கான பிரத்யேக தொழுகை அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை திருச்சி எம்பி துரை வைகோ இந்று திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் அங்கு தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாததால் நல்ல பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும், அவர் கூறியதாவது:
ஃபெஞ்சல் புயல் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டு தனிநபர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பேரிடர் நிதியாக ரூ.6675 கோடி கேட்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. நாட்டிலேயே சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தை மிகச் சிறப்பாக நிறைவேற்றிய மாநிலம் தமிழ்நாடு தான். ஆயினும் திட்டத்திற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2000 கோடியை இதுவரை வழங்கவில்லை. திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி வழங்கிட வேண்டும்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் இந்த பணிகளுக்கான நிதியை மத்திய அரசு தாமதமாக வழங்கியது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம். மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்துவோம்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு கையாளும் திறன் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் பெரும்பாலும் சிறிய ரக விமானங்கள் வந்து செல்வதால் சரக்குகளை அதிகம் கையாளமுடியாத சூழல் நிலவுகிறது. எனவே பெரிய ரக விமானங்களை இயக்குமாறு விமான நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.