சென்னை: 1969ஆம் ஆண்டு முதல் நந்தனம் அரசு கல்லூரி, ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வடநெம்மேலி, பெரும்பாக்கம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் இருபாலர் பயிலக்கூடிய வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக, கல்லூரி தொடங்கப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த காலங்களில் நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
மேலும், நந்தனம் கலைக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் இடைநிற்றலும் அதிகரித்து வந்ததால், காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதேநேரம், நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் ஏற்கனவே முதுகலை பாடப் பிரிவில் மாணவிகள் பயிலலாம் என்ற விதிமுறை இருப்பதால், அதிக எண்ணிக்கையில் மாணவிகள் முதுகலை பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர்.