சென்னை:வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 7-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: இறுதி விசாரணைக்காக ஏப்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு! - ASSETS CASE
வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 7-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Published : Feb 3, 2025, 7:00 PM IST
கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் பொன்முடி. அப்போது அவர் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு அதாவது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு பின்னர் 2023-ம் ஆண்டு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 172 சாட்சிகள் மற்றும் 381 ஆவணங்களை ஆய்வு செய்த வேலூர் நீதிமன்றம் வழக்கு மாற்றப்பட்ட 4 நாட்களில் விசாரித்து குற்றச்சாட்டுக்களை லஞ்ச ஒழிப்புத்துறை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த 2023ம் ஆண்டு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (பிப் 03) மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இறுதி விசாரணை ஏப்ரல் 07ம் தேதி துவங்கி ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.