தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பையான மெரினா: "காணும் பொங்கலுக்கு விடுமுறை கூடாது" - பசுமைத் தீர்ப்பாயம் - TURTLE DEATH

மெரினா கடற்கரையை குப்பையாக்கி விவகாரத்தில், காணும் பொங்கலுக்கு அரசு விடுமுறை அறிவிக்க கூடாது என பரிந்துரை செய்ய இருப்பதாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் -கோப்புப்படம்
தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் -கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 1:22 PM IST

Updated : Jan 21, 2025, 3:30 PM IST

சென்னை: மெரினா கடற்கரை முதல் கோவளம் வரையான கடற்கரைப் பகுதிகளில் அரியவகை கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுக்கின. இது தொடர்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் அமர்வு , தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.

ஆமைகள் இறந்ததற்கு யார் பொறுப்பு? மீனவர்கள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை தான் இதற்கு காரணம் என கூறப்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், ஏற்கனவே இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அப்போது இது தொடர்பாக நிரந்தர வழிகாட்டு விதிமுறைகள் இருந்தும் ஏன் அரசு அமல்படுத்தப்படவில்லை? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்குவதற்கு என்ன காரணம் என்ன? என விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

"காணும் பொங்கலுக்கு விடுமுறை கூடாது"

தொடர்ந்து, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா தனக்கு வந்த இரு புகைப்படங்களை சுட்டிக்காட்டி, மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி குப்பை கூளமாக்கியது குறித்து கேள்வி எழுப்பினார். கடற்கரையை எப்படி பாதுகாப்பது என மக்களுக்கு தெரியவில்லை என வேதனை தெரிவித்த தீர்ப்பாயம், குப்பைகள் கொட்டுவதை தடுக்க காணும் பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்க கூடாது என அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான சண்முகநாதன், குப்பை கொட்டுவதை குற்றமாக கருதி, அபராதம் விதிக்காவிட்டால் இதை தடுக்க முடியாது எனவும், படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், குப்பைகளை வீசிச் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து, குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் சிறப்பு படைகளை அமைக்க அரசுக்கு வலியுறுத்திய தீர்ப்பாயம், இது சம்பந்தமாக விளக்கமளிக்கும்படி, சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டது.

Last Updated : Jan 21, 2025, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details