திருநெல்வேலி: பள்ளி மாணவர்களிடையே சுய - ஒழுக்கம், நல்லிணக்கம் உள்ளிட்டவைகளைக் கொண்டு வரும் முயற்சியாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பில் கடந்த பிப்ரவரி மாதம் "அன்பாடும் முன்றில்" என்ற திட்டம் உருவாக்கப்பட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பள்ளியில் மாணவர்களிடையே நடைபெறும் மோதல்களை தவிர்த்து அவர்களிடையே ஒற்றுமை, இலக்கியம், கலாச்சாரம், உளவியல் மேம்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாணவர்களின் திறனை வளர்க்க குழு விளையாட்டு உட்பட பல புதிய நிகழ்ச்சிகளை நடத்த இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருநெல்வேலியில் மாணவர்கள் வேற்றுமைகளை மறந்து ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் பழகுவதற்கு மாவட்ட கல்வி, காவல், வருவாய், உள்ளாட்சி, விளையாட்டு, திறன் மேம்பாடு, மாவட்ட கலை மன்றம் ஆகிய துறை அதிகாரிகளும், குழந்தைகள் நல மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை 'அன்பாடும் முன்றில்' திட்டத்தின் மூலம் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க :"காலிப் பணியிடங்களை நிரப்பாமல் எப்படி தரமான கல்வியை வழங்க முடியும்" - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
இந்த திட்டத்தின் 125வது நிகழ்வாக பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் மாணவர் தலைமைத்துவ மேம்பாட்டு நிகழ்வு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையாளர் அனிதா, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.