திருநெல்வேலி: தமிழகத்தில் வரும் புதன்கிழமையுடன் பிரச்சாரம் முடியவுள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையில் நேற்று (ஏப்.12) ராகுல் காந்தி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (ஏப்.15) நரேந்திர மோடி 2வது முறையாக நெல்லைக்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக நூதன முறையில் மக்களை ஏமாற்றுவதாக நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா தலைமையில் திமுக நிர்வாகிகள் இன்று (ஏப்.13) நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் கூறுகையில், "பாஜக நூதன முறையில் மக்களை ஏமாற்றி வருகிறது. அது குறித்து புகார் அளிப்பதற்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியைச் சந்தித்து வந்துள்ளோம். மோசடி தொடர்பான புகார் மனுவை தேர்தல் கட்டுப்பட்டு அறையில் கொடுத்துள்ளோம்.
பிஎல்ஓ அதிகாரி மூலம் பாஜக சார்பில் மக்களின் செல்போனுக்கு லிங்க் அனுப்பப்படுகிறது. அதில் தாமரை சின்னம் வருகிறது. அந்த லிங்கை அழுத்தினால் 500 ரூபாய் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த லிங்கை அழுத்தினால் மக்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாக இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம்.