தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி பட்டாசு குடோனில் நிகழ்ந்த வெடிவிபத்தில் மூன்று பெண்கள் பலி; குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிப்பு! - EXPLOSION IN CRACKER WAREHOUSE

தருமபுரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரு பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்து வந்த மூன்று பெண்கள் உடல் சிதறி பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெடிவிபத்து நிகழ்ந்த குடோன் முன் குவிந்த பொதுமக்கள்
வெடிவிபத்து நிகழ்ந்த குடோன் முன் குவிந்த பொதுமக்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2025, 4:11 PM IST

தருமபுரி:தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த பூமிநத்தம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் கம்பைநல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் செண்பகம், திருமலர், திருமஞ்சு உள்பட நான்கு தொழிலாளர்கள் இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிற்பகல் நேரத்தில் குடோனில் இருந்த வெடிபொருட்கள் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில், குடோனில் வேலை செய்து கொண்டிருந்த செண்பகம், திருமலர், திருமஞ்சு ஆகிய மூன்று பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மீதமுள்ள ஒருவர் மதிய உணவிற்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு குடோனில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "கம்பைநல்லூர் அடுத்த பூமிநத்தம் பகுதியில் சின்னதுரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் அரசு அனுமதி பெற்றுதான் நீண்டநாட்களாக செயல்பட்டு வருகிறது. இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் மூன்று பெண் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் விவரம் தமிழக அரசிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் சார்பில் மூன்று குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். பிள்ளைகளின் படிப்புக்கு அரசும் மாவட்ட நிர்வாகமும் போதிய வசதிகளை செய்து தரும்.

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை எந்த பட்டாசு குடோன்களும் உரிமம் இல்லாமல் செயல்படவில்லை. இருந்தாலும் தற்போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதால், அனைத்து பட்டாசு குடோன்களிலும் வருவாய் கோட்டாட்சியர்கள் மூலமாக முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சரியாக நடக்கின்றனவா என்று ஆய்வு செய்யப்படும். விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அந்த பட்டாசு குடோன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று மாவட்ட ஆட்சியர் சதீஷ் எச்சரித்துள்ளார்.

உயிரிழந்த சகோதரிகள் திருமலர், திருமஞ்சு மற்றும் செண்பகம் (ETV Bharat TamilNadu)

வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு குடோன் அமைந்துள்ள பகுதியில் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினா்கள் நுற்றுக்கும் மேற்பட்டோர் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உயிரிழந்த மூன்று பெண்களின் திருமலர், திருமஞ்சு ஆகிய இருவரும அக்கா, தங்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.4 லட்சம் நிதியுதவி:இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பகத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,'தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் காரிமங்கலம் வட்டம், பூமிசமுத்திரத்தைச் சேர்ந்த திருமலர் (38),செண்பகம் (35) திருமஞ்சு (33) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details