தென்காசி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார்.
தற்போது, ஜான் பாண்டியன் ஒருபுறம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜான் பாண்டியனின் மகளும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில மகளிர் அணித் தலைவியுமான வினோலின் நிவேதா, தனது அப்பாவின் வெற்றிக்காக மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
புளியங்குடி நகரில் வீதி வீதியாகச் சென்று, நாட்டாண்மை மற்றும் பொதுமக்களை தென்காசி நாடாளுமன்ற அமைப்பாளர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில மகளிர் அணித் தலைவி வினோலின் நிவேதா வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, அவர்கள் சிந்தாமணியில் மறைந்த இராணுவ வீரர் பார்த்திபன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.