தென்காசி:சென்னைக்கு விமானத்தில் கல்வி சுற்றுலா சென்று வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பட்டாசு வெடித்து கிராமத்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கொண்டலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 95-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இப் பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ், ஆசிரியர்கள், 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேர் தன்னார்வலர்கள், நண்பர்கள் உதவியுடன் கல்வி சுற்றுலாவாக சென்னைக்கு முதன் முறையாக விமானம் மூலம் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 18 ஆம் தேதி சனிக்கிழமையன்று மதுரை விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கல்வி சுற்றுலா சென்றனர். சென்னையில் அவர்கள் பிர்லா கோளரங்கம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், எழும்பூர் அருங்காட்சியகம், சட்டமன்றம், தலைமை செயலகம், சென்னை உயர் நீதிமன்றம், வள்ளுவர் கோட்டம், தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் ஆகியவற்றை சுற்றிப்பார்த்தனர்.