காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் மின் தட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, மின்தட பராமரிப்பு பணிமனை தனியாக துவக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருச்சி - காரைக்குடி - மானாமதுரை ரயில் பிரிவில், மின்மய மின் தட ரயில் பாதையில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும், காரைக்குடியில் ஒரு பணிமனை ரூ.1.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனை கடந்த மே 20ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதில், ரயில் பாதையில் இயங்கும் வகையிலான பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று தயார் நிலையில் உள்ளது. இந்த ரயில் பெட்டி மூலம் நடுவழியில் ஏற்படும் திடீர் மின் தட பழுதுகளை எளிதாக சரி செய்ய முடியும். பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ரயில்களை தங்கு தடை இன்றி குறித்த காலத்தில் இயக்க முடியும்.
வசதிகள்: இந்த பராமரிப்பு ரயில் பெட்டியை இருபுறமிருந்தும் இயக்கலாம். இந்த ரயில் பெட்டி சிறிய பராமரிப்பு பணிமனை போல அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் ரயில் ஓட்டுநர் அறைகள், ஜெனரேட்டர், பராமரிப்பு தளவாட சாமான்கள் வைக்கும் பகுதி, நடுப்பகுதியில் மின்சார வயர்களை ஊழியர்கள் ஆய்வு செய்ய மேலே செல்லும் வகையிலான ஹைட்ராலிக் ஏணி, ஊழியர்கள் அமரும் பகுதி ஆகியவை உள்ளன.