விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சரவணன் என்போருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் மே 9ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரமான பட்டாசு வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமத்துடன் இயங்கி வந்தது. இருந்த போதிலும், பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன் மற்றொரு நபருக்கு குத்தகைக்கு விட்டதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் ரசாயன மூலப்பொருட்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தியது.
பேன்சி ரக பட்டாசு தயாரிப்பதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில், பட்டாசுகளை உற்பத்தி செய்தது; அனுமதிக்கப்பட்ட அறைகளில் பட்டாசு உற்பத்தி செய்யாமல் மரத்தடியில் உற்பத்தியில் ஈடுபட்டது போன்ற பல விதிமீறல்களின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.