தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 7:22 PM IST

ETV Bharat / state

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; கேசவ விநாயகத்திடம் அனுமதியின்றி விசாரணை நடத்த தடை! - Kesava Vinayagam

4 crore seizure case: பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தை நீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மக்களவைத் தேர்தலின் போது, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 4 கோடி பணம் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, தமிழக பாஜக தலைமை நிலையச் செயலாளர் கேசவ விநாயகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த சம்மனை எதிர்த்தும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் கேசவ விநாயகம் தரப்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேசவ விநாயகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், எந்த ஆதாரங்களும் இல்லாமல் மனுதாரரை விசாரணைக்கு அழைத்ததாகவும், இருப்பினும் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு ஆஜராகி, நான்கு மணி நேர விசாரணைக்குப் பிறகு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், விசாரணைக்குச் சென்று திரும்பிய மறுநாளே, மொபைல்போன், சிம் கார்டுகளை ஒப்படைக்கக் கூறி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "மனுதாரரின் மொபைல்போன் உங்களுக்கு எதற்கு, இது துன்புறுத்துவதற்கு சமம், அதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞர், "பணம் பறிமுதல் செய்யப்பட்ட போது மனுதாரர் எங்கிருந்தார் என்பதில் சந்தேகம் உள்ளது, மொபைல்போன் கேட்பதால் எந்த உரிமையும் பாதிக்கப்படவில்லை. காவல்துறை மனுதாரரை துன்புறுத்தவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

மேலும், விசாரணையின்போது, பணம் பிடிபட்ட போது அவர் எங்கிருந்தார் என்பதை தெரிவிக்க மறுத்ததால் தான் செல்போனை சமர்ப்பிக்க கோரியதாகவும் குறிப்பிட்டார். பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மனுதாரரின் தொடர்பு பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

மனுதாரரை துன்புறுத்தும் நோக்கில் செல்போன், சிம் கார்டுகளை சமர்ப்பிக்கும்படி விசாரணை அதிகாரி சம்மன் உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் விசாரணை அதிகாரி தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது" என்று கூறினார்.

மேலும், "வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்ற போதும், மனுதாரரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால், அவரை துன்புறுத்தக்கூடாது. தேவைப்பட்டால், நீதிமன்ற அனுமதியுடன் தான் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதி, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் வழக்கு; இரு நீதிபதி அமர்வு விசாரணை நடத்த உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details