தமிழ்நாடு

tamil nadu

“ஆட்சிக் கட்டிலில் இருந்து திமுக என்ற சக்தி விரட்டப்பட வேண்டும்” - எச்.ராஜா காட்டம்! - Lok Sabha Election Results 2024

H Raja: மூன்றாவது முறையாக மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ஊழல் கரை படிந்த தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் இருந்து திமுக என்ற சக்தி விரட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 5:30 PM IST

Published : Jun 4, 2024, 5:30 PM IST

ETV Bharat / state

“ஆட்சிக் கட்டிலில் இருந்து திமுக என்ற சக்தி விரட்டப்பட வேண்டும்” - எச்.ராஜா காட்டம்! - Lok Sabha Election Results 2024

எச்.ராஜா, மு.க ஸ்டாலின்
எச்.ராஜா, மு.க ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:மல்லிகார்ஜுன கார்கே 295க்கு மேல் என்று சொன்னாரே. அது வரலையே என்று கேட்க முடியுமா? இப்போதும் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. பல மாநிலங்களில் ஓட்டு விகிதம் மாறி இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

எச்.ராஜா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது அவர் கூறியதாவது, “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நாடாளுமன்றத்தில் ஹாட்ரிக் வர முடியாது. நேருவுக்குப் பிறகு 3வது முறையாக யாரும் வந்ததில்லை என்று சொன்ன போது, 3வது முறையாக மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது.

மேலும் இரண்டு மாநிலத்தில் புதிதாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருகிறது. ஒடிசாவில் தனியாக பாஜக போட்டியிட்டு அங்கு 21-க்கு 18-இல் முன்னிலை. பெரும்பான்மை தாண்டி பாஜக மாநிலத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதே மாதிரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருந்து மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. சிக்கிமில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு தேர்தல் நடந்த 4 மாநிலங்களிலும் ஒன்று பாஜக அல்லது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆகவே, இந்த மாநிலத்தில் சீட்டுகள் குறைவு, அந்த மாநிலத்தில் அதிகம் என்பது இருக்கத்தான் செய்யும். தென் மாநிலங்களில் பாஜக இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், கர்நாடகாவில் 4ல் 3 பங்கு இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் பாஜக தான் முதல் கட்சியாக வெற்றி பெற்று இருக்கிறது.

மக்களின் நல் ஆதரவும் பாஜக கட்சிக்கு கிடைத்திருக்கிறது. முழு தேர்தல் பரிமாணங்கள் இனிமேல் தான் வரும். அதனால் மாநில வாரியாக வாக்குகள் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் முன்னணியில் இருக்கிறது என்று தகவல் வந்தது. இதை தோல்வி என்று எப்படி சொல்ல முடியும்? இது ஏற்கனவே நாம் முயற்சி செய்தது. 2014ல் இதே மாதிரி கூட்டணி, தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாத 3வது அணி பாஜக அமைத்தது.

ஆனால், இப்போது 12 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆகவே, தமிழகத்தில் 3வது நிலையான அரசியல் கட்சியாக பாஜக வந்திருக்கிறது. நாம் எதிர்பார்த்தபடி எண்ணிக்கை வராமல் இருக்கலாம். ஆனால், 3வது நிலையான கட்சியாக உருவாக்கி இருக்கிறோம். 2026ல் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக களத்தில் நன்றாக விளையாடும்” என்றார்.

பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் திமுக 38 இடங்களில் முன்னிலையில் இருப்பது குறித்த கேள்விக்கு, “அப்படியென்றால் செந்தில் பாலாஜி உத்தமராகி விட்டார் என்று சொல்ல வருகிறீர்களா? வெற்றி பெற்றிருந்தாலும் துரைமுருகன் கூட 60 ஆயிரம் கோடி ரூபாய் என்று நான் சொல்லவில்லை. முன்பெல்லாம் கொடி காத்த குமரனை பற்றி பேசினோம். இப்போது குடியாத்தம் குமரனை பற்றி பேசுகிறோம். ஊழல் கரை படிந்த தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் இருந்து திமுக என்ற சக்தி விரட்டப்பட வேண்டும்.

38 தொகுதியில் திமுக முன்னிலையில் இருந்தாலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால், அது செந்தில் பாலாஜி, பொன்முடி இவர்களின் ஊழல் குற்றங்களை தடுக்காது. அதனால் காத்திருந்து பார்ப்போம்” என்றார். பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்தது குறித்த கேள்விக்கு, “மல்லிகார்ஜுன கார்கே 295-க்கு மேல் என்று சொன்னாரே. அது வரலையே என்று கேட்க முடியுமா? இப்போதும் பாஜக அல்லது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. பல மாநிலங்களில் ஓட்டு விகிதம் மாறி இருக்கிறது.

இந்த அரசு ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பதில் எதுவும் கிடையாது. ஊழல் வழக்குகள் தொடரும். ஆனால், எந்த மாநிலமாக இருந்தாலும் நிதிப் பங்கீட்டில் மாற்றம் இருக்காது. கேரளாவில் பாஜக வெற்றியை துவங்கி இருக்கிறது. இரண்டு நாடாளுமன்றத் தொகுதியில் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. கேரளாவில் ஆட்சியில் இருக்கும் கட்சியை விட நாம் உறுதியாக இருக்கிறோம். திமுக நிதி கொடுக்கவில்லை என்று கூறியது வடிகட்டிய பொய்.

இந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு 11 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளது. 2004 - 2014 காலத்தில் திமுக மத்திய அரசின் அங்கத்தில் இருந்தது. அப்போது தமிழகத்திற்கு வந்த நிதி 3 லட்சம் கோடி தான். அதனால் ஸ்டாலின் பொய் சொல்வதை இனிமேலாவது நிறுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதை பிரதமர் தான் முடிவு செய்ய வேண்டும். ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், எல்.முருகன் இவர்கள் எல்லாம் மந்திரி சபையில் இருந்தார்கள். அதனால் அதை பற்றி நான் பேசவேக் கூடாது. அனைத்து விதத்திலும் தமிழகத்திற்கு முக்கியத்துவம் இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:'மற்றவை' இல்ல 'மூணாவது'... அதிமுகவை பின்தள்ளிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்! - Naam Tamilar Katchi

ABOUT THE AUTHOR

...view details