திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில், திமிங்கலத்தின் எச்சம் வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குள்ளப்பனார் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (43) என்பவர் வீட்டில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 2 கிலோ அளவிலான திமிங்கலத்தின் எச்சம் வைத்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக போலீசார் திருப்பத்தூர் போஸ்கோ நகரைச் சேர்ந்த சிவகார்த்திகேயன் (28), வினித் (27), புங்கம்பட்டு நாடு மலை கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் (25), திருப்பத்தூர் சவுடே குப்பம் பழைய காலனியைச் சேர்ந்த பாண்டியன் (22), அன்னாண்டப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சிக்கந்தர் (22), சண்முகனார் தெருவைச் சேர்ந்த சத்யநாராயணன் (22) ஆகியோரை பிடித்தனர்.