விழுப்புரம்:விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 14) காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும் 21-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால், அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் வேட்பாளர்:இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 8.19 சதவீதம் வாக்கு பெற்று மாநில கட்சியாக அந்தஸ்து பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.