தமிழ்நாடு

tamil nadu

அம்பத்தூரில் ஆர்டர் செய்த உணவை வழங்காமல் மோசடி; ரூ.1.67 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு! - Cheating by not delivering food

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

மஞ்சள் நீராட்டு விழா விருந்தில் 230 பேருக்கு அசைவு உணவு ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், ஹோட்டல் தரப்பில் 90 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டுள்ளகாக தொடர்ப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு மொத்தம் ரூ.1,67,860 இழப்பீடு வழங்க திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு (கோப்புப் படம்)
நீதிமன்றம் உத்தரவு (கோப்புப் படம்) (Image Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னையில் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ஆர்டர் செய்த உணவை முழுமையாக வழங்காமல் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1,67,860 இழப்பீடு வழங்க ஹோட்டல் உரிமையாளருக்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் நித்தியசெல்வி பாலமுருகன். இவரது மகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி, அம்பத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலின் நிகழ்ச்சி அறையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்து அளிப்பதற்காக, அதே ஹோட்டலில் 230 பேருக்கு அசைவ உணவு ஆர்டர் செய்து அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி நடைபெற்ற அன்று விருந்தினர்களில் 90 பேருக்கு மட்டுமே முறையாக அசைவ உணவு பரிமாறப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு நீண்ட நேரம் உணவு பரிமாறவில்லை எனவும் கூறப்படுகிறது.

பின்னர், இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கு, ஆர்டர் செய்த 240 பேருக்கும் உணவு பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், பின்னர் அருகில் உள்ள உணவகத்தில் பார்சல் உணவு வாங்கி வந்து விருந்தினர்களுக்கு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக ஓபிஎஸ் அறிக்கை.. அதிமுக ஒன்றிணைப்பில் திருப்புமுனை!

இந்நிலையில், 140 பேருக்கு உணவு பரிமாறாமல் மோசடி செய்த ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிசிடிவி ஆதாரத்துடன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், ஹோட்டல் உரிமையாளர் அதற்கான தொகையை திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் உறுதி அளித்தபடி அதற்கான பணத்தை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நித்தியசெல்வி பாலமுருகன் தரப்பினர், வழக்கறிஞர் மூலம் உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதற்கும் ஹோட்டல் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, உணவுக்காக செலுத்திய ரூ.1,39,325 தொகையை திருப்பி பெற்றுத்தரக் கோரியும், மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக நஷ்ட ஈடாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடக் கோரியும், நித்தியசெல்வி பாலமுருகன் தரப்பினர், திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், ஹோட்டல் நிர்வாகம் மோசடி செய்தது நிரூபணம் ஆனது.

இதைத் தொடர்ந்து, ஹோட்டல் நிர்வாகத்தினரால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அளிக்காத மீதி உணவுக்கான தொகை ரூ.57,860, வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ரூ.1 லட்சம், வழக்குச் செலவுக்காக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1,67,860 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இத்தொகையை 6 மாதத்துக்குள் வழங்கத் தவறினால் 9 சதவீதம் வட்டியுடன் மொத்த தொகையை வழங்க வேண்டும் எனவும் திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற தலைவி லதா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details