சேலம்:சேலம் மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டமானது மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று (பிப்ரவரி 25) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர்கள், நிர்வாக அதிகாரிகள் சரியாக பணியாற்றுவதில்லை. இதனால் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுவதாக திமுக கவுன்சிலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் அவரவர் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் பேசிய 26-வது வார்டு திமுக கவுன்சிலரும், சூரமங்கலம் மண்டலக் குழுத் தலைவருமான கலையமுதன், “எங்கள் பகுதியில் முடிவு பெறாத திட்டப் பணிகளை முடிக்கப்பட்டதாக அஜெண்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக பள்ளப்பட்டி ஏரி பகுதியில் சீரமைப்பு பணிகள் முடியாமல் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அதிகாரிகள் யாரும் சரிவர வேலை செய்வதில்லை” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் பேசிய அவர், “என்ன நடக்கிறது நிர்வாகத்தில்? முதலமைச்சர் திறந்து வைத்த கட்டடத்தில் குடிநீர், கழிப்பறை வசதி முழுமையாக ஏற்படுத்தாமல் 8 மாதங்களாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை. பாதி வேலை நடந்து கொண்டிருக்கும் போது ஏன் சிறப்பு நிதியிலிருந்து பணம் தர வேண்டும். இதுவரை இப்படி ஒரு நிலை இருந்ததில்லை பேசாமல் ராஜினாமா செய்து விட்டுப் போய்விடலாம் என இருக்கிறேன். கேவலமாக இருக்கிறது” என்று கூறினார்.
மேலும் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் மன்றத்தை விட்டு வெளியே செல்ல முயன்றார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி ஆளுங்கட்சியின் மூத்த கவுன்சிலர்களை வெளிநடப்பு செய்கின்றனர் என்று பேசத் தொடங்கினார். உடனே திமுக கவுன்சிலர் கலையமுதன் நான் எங்கும் வெளிநடப்பு செய்யவில்லை எனக் கூறிவிட்டு மீண்டும் இருக்கைக்குத் திரும்பி அமர்ந்தார்.