காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.எஸ்.எஸ்.சாந்தகுமார். இவர் அப்பகுதி 15வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு, வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் PPG.சங்கர் என்பவரைக் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான சாந்தகுமார் 1 வருடச் சிறைத் தண்டனைக்குப் பிறகு, சமீபத்தில், சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில், வேறொரு கொலை வழக்கிற்காக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், போலீசார் சாந்தகுமாரைப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், காவலர்கள் தாக்கியதால் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரனை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இது திட்டமிட்ட படுகொலை எனக் கூறி, சாந்தகுமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒரு வாரத்திற்கு மேலாகியும் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உயிரிழப்புக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்தியக் குடியரசுக் கட்சி மாநிலத் தலைவர் சூசை, உயிரிழந்த நபரின் மனைவியுடன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.