சென்னை:தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகி வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது அதையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குளம் போல் காட்சியளிக்கும் சென்னை: சென்னையின் ஒரு சில இடங்களில் மழை விட்டு விட்டுப் பெய்தாலும் சென்னை புறநகர் பகுதிகளான எண்ணூர், மாதவரம் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சென்னை புறநகர் பகுதிகளான திருவெற்றியூர், எண்ணூர், மாதவரம் , கொளத்தூர் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் சாலைகள் மட்டும் அல்லாமல் வீடுகளில் உள்ளேயும் மழை நீர் சூழ்ந்துள்ளது.