தமிழ்நாடு

tamil nadu

திருப்பூர் நகரில் படையெடுக்கும் வௌவால் கூட்டம்.. நிஃபா வைரஸ் பீதியில் மக்கள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை - Tiruppur People Suffering to Bats

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 12:03 PM IST

Tiruppur Bats issue: திருப்பூரில் செயல்படாமல் கிடக்கும் தனியார் மில் வளாகத்தில் உள்ள மரங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ராட்சத வௌவால்கள், தினமும் இரவில் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுப்பதால் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூரில் வௌவ்வால்கள் சுற்றித்திரியும் காட்ச்
திருப்பூரில் வௌவ்வால்கள் சுற்றித்திரியும் காட்ச் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள தனலட்சுமி என்ற மில் ஒன்று உள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த இந்த மில் தற்போது மூடப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. இந்த நிலையில், பூட்டிக் கிடக்கும் இந்த மில் வளாகத்தில் ஏராளமான மரம், செடி, கொடி என வளர்ந்து புதர்க்காடாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, உள்ளே இருக்கும் கட்டடங்களும் பாழடைந்து பயமூட்டும் வகையில் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

வௌவால்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பூரின் மத்தியில் உள்ள போதும், இந்த மில் வளாகம் மட்டும் ஒரு காட்டுப்பகுதியைப் போலவே காட்சியளிக்கிறது. அதனால், அங்குள்ள மரங்களில் ஏராளமான வௌவால்கள் கூடுகட்டி கூட்டம் கூட்டமாக வசிக்கின்றனர். இந்த வௌவால்கள் பகல் முழுவதும் அங்குள்ள கட்டடங்களிலும், மரங்களிலும் அமைதியாகத் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், இரவாகத் தொடங்கிய பின்னர்தான் இந்த ராட்சத வௌவால்களின் ஆட்டம் துவங்குகிறது. அந்திசாயும் பொழுதே பெருங்கூச்சலுடன் கூட்டம் கூட்டமாக படையெடுயத்து கிளம்பும் வௌவால்கள் கொங்கு மெயின்ரோடு, புதுராமகிருஷ்ணாபுரம், கே.பி.என்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் படையெடுத்துவிடுகின்றன.

மேலும், வீடுகளில் உள்ள அறைகள், பார்க்கிங் பகுதிகள், வளாகங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் சாரை சாரையாகச் சுற்றித்திரியும் இந்த வௌவால்களின் எச்சங்கள் நிரம்பி துர்நாற்றம் வீசுவதாகவும், பொதுமக்களை அச்சமூட்டும் விதமாக பறந்து திரிவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், மாலை மங்கினாலே பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூட அஞ்சும் அளவுக்கும் ஒரு மோசமான நிலை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, வௌவால்களின் எச்சத்தால் குடியிருப்புப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், நிஃபா வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதாலும் இந்த பகுதியில் உள்ள வௌவால்களை அப்புறப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் பட்டாசு குடோனில் வெடி விபத்து; பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details