தமிழ்நாடு

tamil nadu

சேலம், கோவையில் தாய்சேய் நல கருத்தரித்தல் மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு! - TN Assembly Session 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 3:04 PM IST

Government fertility centres: சென்னை, மதுரை மாவட்டங்களை தொடர்ந்து சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய தாய்சேய் நல கருத்தரித்தல் மையம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் புகைப்படம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:நடப்பாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 29) தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், அரசு மருத்துவமனைகளில் அதிநவீன உபகரணங்கள் மற்றும் சிகிச்சை வழங்க அரசு முன்வருமா என எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

அதில், "இந்தியாவில் முதல்முறையாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ரூ.13 கோடி மதிப்பில் அதினவீன மூளை இரத்த நாள ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10.92 கோடி மதிப்பில் மூளை ரத்த நாள ஆய்வகம் திறக்கப்படவுள்ளது. இதுமட்டுமின்றி, இம்மாத துவக்கத்தில் எக்மோர் தாய் சேய் நல மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் துவங்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், சேலம் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிதாக செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இதனைத் தொடர்ந்து, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, கிராமங்களில் மினி பேருந்துகள் வசதி எப்போது அதிகரிக்கப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன், மினி பேருந்துகள் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் மினி பேருந்து புறக்கணிக்கப்பட்டது. தற்போது திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு, மினி பேருந்துகள் கிராமங்களிலும் சென்று வருகிறது. தற்போது புதிய வழித்தடங்களுக்கான கொள்கையை அமைக்க உள்ளோம். அடுத்த மாதம் உள்துறை செயலாளர் தலைமையில் மக்கள் கருத்து கேட்கப்பட்ட பிறகு, அதிக கிராமப்புற வழித்தடங்களில் மினி பேருந்துகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றுவது குறித்து பரிசீலனை - மு.க ஸ்டாலின் உறுதி! - TN ASSEMBLY SESSION 2024

ABOUT THE AUTHOR

...view details