சென்னை:நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21ம் தேதி திரையரங்களில் ரீ-ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியீடு செய்வதற்கு தடை விதிக்கக் கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்து பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2008 முதல் 2013ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார்.