தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:44 AM IST

ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; தீட்சிதர் குழுவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Chidambaram Dikshitar issue: உரிய ஒப்புதல் பெறாமல் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாற்றங்கள் மற்றும் கட்டுமானம் செய்யப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்வோம் என்று பொது தீட்சிதர்கள் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்

சென்னை: மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெறாமல், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாற்றங்கள் மற்றும் கட்டுமானங்கள் மேற்கொள்வதைத் தடுக்கவும், கோயில் கணக்குகளை சமர்ப்பிக்கவும் பொது தீட்சிதர்கள் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு பிப்.21 அன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, ''சட்ட விரோதமாக கட்டுமானம் மேற்கொள்ள மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மீறி தீட்சதர்கள் பணிகளை மேற்கொள்கின்றனர்'' என்று கூறி, அதற்கான புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் 2023-2024ஆம் ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலில் ரூ.2 லட்சம் வருவாய் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஆருத்ரா தரிசன விழாவில் மட்டும் ரூ.6 லட்சம் கிடைத்துள்ளது” என அறநிலையத்துறை சார்பில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் மற்றும் ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த மூன்றாண்டு வரவு, செலவு மற்றும் வருமான வரித் தாக்கல் போன்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும், கோயில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை, காணொலிக் காட்சி வாயிலாக நிரூபிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (பிப்.23) பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, “உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், கட்டுமானப் பணிகள் மூலம் கோயிலில் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்ய மாவட்ட நீதிபதிகளை அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்து இதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “உரிய ஒப்புதல் பெறாமல் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாற்றங்கள் மற்றும் கட்டுமானம் செய்யப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்வோம்” என்று பொது தீட்சிதர்கள் குழுவுக்கு எச்சரிக்கை விடுத்து, வழக்கை மார்ச் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:தேசிய முதியோர் நல மருத்துவமனையை நாளை பிரதமர் திறந்து வைக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details