சென்னை: நாளை மறுநாள் (ஆகஸ்ட் 31) மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக் கோரி, தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கார் பந்தயம் நடத்தும் போது மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், எப்ஐஏ எனும் சர்வதேச அமைப்பு ஒப்புதல் பெறப்பட்டதா? மருத்துவமனைகளுக்கு இடையூறு இல்லாமல் மக்கள் செல்ல எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்கள் பாதுகாப்பு, இயல்பான போக்குவரத்து ஏற்பாடு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இல்லாமல் செல்வது உள்ளிட்டவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.