சென்னை:கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில், காலபைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு, நீர்நிலைகள் பகுதியில் உள்ள இந்த தகன மேடையை அகற்றக் கோரி, இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தகன மேடை அமைய உள்ள பகுதிக்கு அருகில் வசிப்பதாகக் கூறியுள்ள மனுதாரர், இருட்டுப்பள்ளம் எனும் பகுதியில் வசிப்பதாகவும், மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் ஒரு ஷெட் மட்டும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு எவரும் வசிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எனவும், அவரது மனைவி அரசு ஊழியராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஈஷா தரப்பு, இவர்கள் போலி முகவரியை சமர்ப்பித்தள்ளதாகவும், மனுதாரர் கூறுவது போல சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் இல்லை எனவும், முறையாக அனுமதி பெற்று தகன மேடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.