தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 6:41 PM IST

Updated : Jul 25, 2024, 7:49 PM IST

ETV Bharat / state

"எங்க மாநிலத்துல கரண்ட் பில் கம்மி" - தமிழ்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வலை விரித்த ம.பி. முதலமைச்சர். - Madhya Pradesh CM Mohan Yadav

Madhya Pradesh CM Mohan Yadav : திருப்பூரை நகலெடுத்தது போல மத்திய பிரதேசத்தில் டெக்ஸ்டைல் தொழில் பூங்காவை உருவாக்க அம்மாநில அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பான திறன் மேம்பாட்டு ஒப்பந்தம் கோவை வந்துள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

மத்திய பிரதேசம் முதலமைச்சர் மோகன் யாதவ்
மத்திய பிரதேசம் முதலமைச்சர் மோகன் யாதவ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுக்கும் வகையில் அம்மாநிலத்தின் தொழில்துறை சார்பில் 'மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் கோவை, நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

ம.பி. முதலமைச்சர் மோகன்யாதவ் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதில் மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கலந்து கொண்டு, தொழில்துறையினருக்கு வழங்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் மானியங்கள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இந்த சந்திப்பின் போது, திருப்பூர் ஏற்றுமதி கூட்டமைப்பினருடன் (Tiruppur Export Association ) மத்தியப் பிரதேச அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இதன்படி, அம்மாநிலத்தின் ஜபல்பூரில் ஒருங்கிணைந்த மெகா டெக்ஸ்டைல் பார்க் (PM Mitra Integrated Mega Textile Park ) அமைக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். மத்தியபிரதேசத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தொழிற் பூங்கா அமைக்கப்படும் நிலையில், இதற்கு உதுணையாக கோவையில் ஒரு தகவல் தொடர்பு அலுவலகத்தையும் திறக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, தொழில் துறையினருக்கான வாய்ப்புகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், அரசு உதவிகள் உள்ளிட்ட தொழில் துறையினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து இக்கருத்தரங்கில் விளக்கப்பட்டது. இதில் கோவை, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில், இன்ஜினியரிங் (Engineering), ஆட்டோமொபைல்ஸ்(Automobiles), சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தகவல் தொழில்நுட்பத்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதனையடுத்து, இந்நிகழ்வில் மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன்யாதவ் பேசுகையில்,“ எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறினார். தொடர்ந்து, இயற்கை வளம், கனிம வளம், கலாச்சாரம் என அனைத்திலும் தமிழகத்திற்கும் மத்திய பிரதேசத்திற்கும் ஒற்றுமை உள்ளது. கோவையும், திருப்பூரும் ஜவுளித்துறையின் மையம் என கூறுவதற்கு காரணம் தொழில் துறையினரின் உழைப்பும் அர்ப்பணிப்பும்.

ஆசியாவில் முக்கிய ஜவுளி உற்பத்தி மையமாக திருப்பூர் உள்ளது. இதேபோல், ஆட்டோமொபைல், பொறியியல் மற்றும் பம்ப்(pump) உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம். ஜவுளி தொழிலுக்கு உகந்த சுற்றுச்சூழல் அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஜவுளி தொழிலின் மூலப் பொருளாக விளங்கும் பருத்தி உற்பத்தி மத்திய பிரதேசத்தில் அதிகரித்திள்ளது.

பருத்திக்கான செலவு குறைந்த நிலம், கவர்ச்சிகரமான நிதி பலன் ஆகிய காரணிகளால் பெரிய ஜவுளி நிறுவனங்கள் மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்துள்ளன. ஜவுளி நிறுவனங்களுக்கான மின்சார மானியம், நீர் சலுகை ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், ஆட்டோமொபைல், பொறியியல், இயந்திர உற்பத்தி ஆகியவற்றின் மையமாக மத்திய பிரதேசம் உருவாகி வருகிறது.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட உஜ்ஜயினி மற்றும் ஜபல்பூர் மாநாட்டில் பெரும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 7,8 தேதிகளில் போபாலில் தொழில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். முன்னேறி வரும் இந்திய நாட்டில், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான இணைப்பு என்றென்றும் தொடரும்” என்றார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய பிரதேசம் முதலமைச்சர் மோகன் யாதவ் கூறியதாவது, “தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கோயம்புத்தூர் மிக முக்கிய பங்கு அளித்துள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தின் தொழில் வளர்ச்சிக்கு கோயம்புத்தூரை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கு வகிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் இருந்து எந்த தொழில் நிறுவனங்களையும் எடுத்துச் செல்லவில்லை.

தொழில் நிறுவனங்களின் விரிவாக்க திட்டத்திற்கு முதன்மை மாநிலமாக மத்திய பிரதேசம் விளங்க வேண்டும் என்ற அடிப்படையிலே இக்கருத்தரங்கங்கள் நடத்தப்படுகிறது. மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்களை இணைக்கும் வகையில் தொழில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு தொழில் இணைப்பு உருவாக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழில் துறையினர் கூறுகையில், “தமிழ்நாட்டை காட்டிலும் குறைவான மின் கட்டணம், அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்குகிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச அரசு கூறியுள்ள சலுகைகள் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் அங்கு செல்ல வாய்ப்புள்ளது” இவ்வாறு கூறினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஸ்விக்கி, சொமாட்டோ மூலம் மது விற்பனை? அமைச்சர் முத்துசாமி பதில்!

Last Updated : Jul 25, 2024, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details