தமிழ்நாடு

tamil nadu

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ திட்டம்: ரூ.80.48 லட்சத்துக்கு கையெழுத்தான ஒப்பந்தம்! - Koyambedu to Avadi Metro Project

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 7:59 AM IST

Koyambedu to Avadi Metro Project: சென்னையில் கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ வழித்தடத்தை அறிமுகப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.80.48 லட்சத்துக்கு கையெழுத்தாகியுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ஒப்பந்தம் கையெழுத்தான புகைப்படம்
மெட்ரோ ஒப்பந்தம் கையெழுத்தான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வண்ணம் மெட்ரோ சேவை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் சென்னையில் உள்ள மக்களுக்கு மெட்ரோ முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம். அதாவது, சென்னையில் கடந்த 2015ஆம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில், தற்போது சென்னை மக்களின் போக்குவரத்தில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.

இந்த நிலையில், 54 கிலோமீட்டருக்கு இரண்டு வழித்தடங்களில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்கும் நீட்டிக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ பணி முன்மொழியப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்பேட்டிலிருந்து பாடி புதுநகர், அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயல் வழியாக ஆவடி வரை மெட்ரோ இரயில் அறிமுகம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் M/s RITES நிறுவனத்திற்கு ரூ.80.48 லட்சம் மதிப்பில் கையெழுத்தானது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) M/s RITES நிறுவனத்திற்கு ஜூன் 11ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்தியாவில் போக்குவரத்து ஆலோசனை மற்றும் பொறியியல் துறையில் முன்னணியில் நிறுவனம் என M/s RITES நிறுவனம் கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் இ.ஆ.ப., மற்றும் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் M/s RITES நிறுவனத்தின் சார்பாக சுதீப் குமார் குப்தா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த வழித்தடம் தோராயமாக 16 கிலோ மீட்டர் நீளத்திற்கு 15 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், தொழில்துறை மற்றும் மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

முழு நீளத்திற்கும் மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தில் ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. நவம்பர் 2024-க்குள் இதுதொடர்பான பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 31) கோயம்பேடு ஆவடி மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில், தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் M/s RITES நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details