சென்னை:இந்திய நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அர்பணிப்போடு சேவைகளில் ஈடுபடுவர்களை பாராட்டும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த அமீர் பெயரினால் கோட்டை அமீர் என்ற பெயரால் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கோட்டை அமீர் நல்லிணக்கப் பதக்கத்தை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சாவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வழங்கினார். கோட்டை அமீர் விருது பெற்ற அமீர் அம்சா ஈடிவி பாரத்திற்கு தனது குடும்பத்தினருடன் அளித்த சிறப்பு பேட்டியில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதரவற்று இறந்தவர்களின் உடல்களை காவல்துறையின் உதவியுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம். இதுவரை 15,000 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம்.
மேலும் இறந்தவர்களின் முறைப்படி அவர்களின் உடல்களை அடக்கம் செய்வோம். காவல்துறையினர் அழைத்து எந்த நேரத்தில் உடலை எடுக்க வேண்டும் என கூறினாலும் சென்று எடுத்து வந்து அடக்கம் செய்வேன். கெரோனா தொற்றுநோய் பாதிக்கப்பட்ட காலங்களில் சுமார் 200 பிரேதங்களை நல்லடக்கம் செய்துள்ளோம். கெரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 700 நபர்களுக்கு மருத்துவம் மற்றும் தேவையான உதவிகளை செய்துள்ளேன்.
இரு சக்கர வாகனம் பழுது பார்த்து வருகிறேன். அதில் வரும் வருமானத்தில் குடும்பத்திற்கும் செலவிட்டு வருகிறேன். மேலும் உடல்களை அடக்கம் செய்யும் போது, ஏற்படும் கூடுதல் செலவிற்கு எனது மாமாவும் எனக்கு நிதி உதவி வழங்குவார். உடல்களை பெற்று சாதி, மதம் பார்க்காமல் எடுத்து வந்து, இறந்தவரின் முறைப்படி உடலை அடக்கம் செய்கிறோம்.