கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் வேளாண் படிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்பம் இன்று முதல் தொடங்குகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வேளாண்மை இளமறிவியல், பட்டயப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து விளக்கினார்.
அப்போது பேசிய அவர், “கோடை மழைப்பொழிவு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிகக் குறைவாக இருந்துள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். தென்மேற்கு பருவ கால மழைப்பொழிவு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக பயிர் அறுவடை செய்யலாம்” என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்துத்துப் பேசிய அவர், “120 ஆண்டுகால பழமை வாய்ந்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ், 18 உறுப்புக் கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் இயங்கி வருகிறது. கல்லூரிகளில் இளம் அறிவியல், டிப்ளமோ, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப இணையதளம் இன்று முதல் துவங்கப்படுகிறது.
அதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை tnagfi.ucanapply.com என்ற ஒரே இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ஜூன் 6ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 14 படிப்புகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இரண்டு படிப்புகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் 9 படிப்புகளுக்கும், மூன்று விதமான டிப்ளமோ படிப்புகளுக்கும் மாணவர்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று கூறினார்.
இட ஒதுக்கீடு:இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும், அக்ரி வோகேஷ்னல் படிப்பு படித்தவர்களுக்கு 5 சதவீதமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும் உள்ளது. இவை தவிர, விளையாட்டு பிரிவு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு சீட் என தலா 20 சீட்டுகள் ஒதுக்கப்படுகிறது.