புதுக்கோட்டை:தமிழ்நாட்டில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ஏழை மாணவர்களின் 'மருத்துவர்' கனவை நனைவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு 584 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 622 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 5 மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளது, அப்பகுதி மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயலோகம் அரசு பள்ளியில் மொத்தம் 798 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயராஜ் பணியாற்றி வருகின்றனர். இங்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நேரம் போக காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கும் பெரிதும் உதவி வருகின்றன. இதனை பயன்படுத்தி இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இலவசமாக கல்வி பயின்று வருகின்றனர்.
5 மருத்துவ மாணவர்கள்:இந்நிலையில் கடந்த 2021 - 2022-ஆம் ஆண்டுகளில் படித்த சுதாகர் மற்றும் சுபாஸ்ரீ, 2022 - 2023-ஆம் படித்த ஆர்த்தி, ஜெயந்தி, கடல் வேந்தன் என ஐந்து மாணவர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மூன்று மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியிலும் இரண்டு மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரியிலும் மருத்துவம் படிக்கத் தேர்வாகியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வருடம் நீட் தேர்வில் 33 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், 28 பேர் எம்பிபிஎஸ் படிப்பிற்கும், ஐந்து பேர் பிடிஎஸ் படிப்பிற்கும் தேர்வாகியுள்ளனர். இதில் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.