தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 10:56 AM IST

ETV Bharat / state

நெல்லையில் கட்டிட தொழிலாளி ஓட ஓட வெட்டிக்கொலை.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்! - nellai murder

thoothukudi man murdered in nellai: நெல்லை பாளையங்கோட்டை மகாராஜா நகர் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே நேற்று நள்ளிரவில் கட்டிட தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளயங்கோட்டையில் கொலை நடந்த இடம்
பாளயங்கோட்டையில் கொலை நடந்த இடம் (Credit - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மந்திரம் ( 29). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலை காரணமாக மந்திரம் நேற்று (ஜூலை 11) பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார். பின்னர் இரவு 11 மணி அளவில் தியாகராஜ நகர் ரயில்வே பீடர் சாலையில் நடந்து வந்தபோது இவரை பின்தொடர்ந்த ஒருவர் அரிவாளோடு விரட்ட தொடங்கியுள்ளார்.

இதனால் பதறிப்போன மந்திரன் அங்கிருந்து ஓட்டம் எடுத்த நிலையில் விரட்டி சென்ற மர்ம நபர் மந்திரத்தை மகாராஜா நகர் ரயில்வே மேம்பாலம் அருகே மடக்கி பிடித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளார். இதில் அவரது வலது கை மணிக்கட்டு துண்டானதோடு, பின்னந்தலையிலும் வெட்டு விழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மந்திரம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற இடம் பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலையம் உட்பட்டது என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்டமாக, மந்திரத்தின் பக்கத்து ஊரைச் சேர்ந்த நபர்களே வெட்டி கொன்றதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் வெளியான தகவலின்படி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி கூறும்போது, தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடந்ததாகவும், அரிவாளால் வெட்டியதில் கழுத்து, இடது தோள்பட்டை, இடது தொடையில் கடுமையான காயங்கள் மந்திரத்துக்கு ஏற்பட்டு இறந்ததாகவும் கூறினார்.

மேலும், கொலையான மந்திரம் அவரது மனைவியான கவிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும், கவிதா மகாராஜன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக மந்திரம் சந்தேகப்பட்டு குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த சூழலில், சம்பவத்தன்று மகாராஜா நகர் ரயில்வே மேம்பாலத்தின் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மந்திரனும், மகாராஜாவும் மது அருந்தி கொண்டிருந்தபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு தொடர்ந்து மகாராஜன் மந்திரத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:"மதுரையில் என்னை கொல்ல முயன்ற போலீசார்..என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்" - சாட்டை துரைமுருகன் பகீர்

ABOUT THE AUTHOR

...view details