சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுக்க தவறியதாக, தமிழக அரசைக் கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இன்று (ஜூன் 27) ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாலை உண்ணாவிரதத்தை முடித்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் இன்று இந்தியாவே உற்றுநோக்கும் சம்பவமாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சி நகர் மையப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதுவரை 63 உயிர்களை இழந்துள்ளோம். இன்னும் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் அபாய கட்டத்தில் உள்ளனர், பலருக்கு கண் பார்வை முற்றிலுமாக போயுள்ளது.
அதிமுக சார்பில் உடனடியாக நான் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து, பின்னர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். இதை அரசுக்கு கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதால், சட்டமன்றத்தில் விதிகளுக்கு உட்பட்டு சட்டமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பினைக் கேட்டோம். ஆனால், சட்டப்பேரவை தலைவர் அனுமதிக்கவில்லை.
சட்டமன்றத்தில் பேச மறுப்பு: தொடர்ந்து, விதி 56ன் கீழ் முறையாக மனு அளித்து சட்டமன்றத்தில் பேசுவதற்கு வாய்பினை தாருங்கள் என்றோம். சட்டமன்றத்தில் தான் மக்களின் பிரச்னைகளை பேச முடியும். அந்த வகையில், அரசின் கவனத்திற்காக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, எங்களை வேண்டுமென்றே வெளியே அனுப்பி விட்டார்கள். அதற்கு பின் முதலமைச்சர் பதில் அளிக்கிறார்.
எங்களுக்கு வாய்ப்பை கொடுத்து அதற்கு பின் பதில் அளிக்கலாம். சட்டப்பேரவை 56 விதிப்படி, அவசர பொது முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வுகளை சட்டப்பேரவை அலுவலை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என சொல்கிறது. அதன் அடிப்படையில் தான் நாங்கள் கேட்கிறோம். ஆனால், கேள்வி நேரத்தின் போது இதை எடுத்துக்கொள்ள முடியாது என சட்டப்பேரவைத் தலைவர் கூறுகிறார்.
அதே நேரத்தில் எங்களை வெளியேற்றி விட்டு, கள்ளக்குறிச்சி மரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நிமிடம் விவரிக்கிறார். கேள்வி நேரத்தின் போது விதிகளின்படி தான் நடக்க வேண்டும் என சொல்லும் சபாநாயகர், எதிர்கட்சிகள் பேசுவதற்கு மட்டும் வாய்ப்புகளை மறுக்கிறார், இது என்ன நியாயம்? இது தான் நீதியா?. ஒரு நல்ல அரசாங்கத்திற்கு எது அழகு என்றால், எதிர்கட்சிகளை பேசவிட்டு என்ன பிரச்னை என்பதை ஆராய்ந்து தீர்க்க வேண்டும்.
இந்த விடியா திமுக அரசு, 3 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் பேச வாய்ப்புகளை தருவது இல்லை. ஒவ்வொரு மானியக் கோரிக்கையின் போது 10 நிமிடம் தான் எதிர்கட்சிகளுக்கு தருவார்கள். ஒரு வாரமாக மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. சுமார் 7 நாட்கள் தான் நடைபெறுகிறது. இதில் எவ்வாறு அனைத்து துறை குறித்து பேச முடியும்? திமுக சம்பிரதாயத்திற்காக சட்டமன்றத்தை நடத்துகிறது.
இந்த ஆட்சி சர்வாதிகார ஆட்சி, ஜனநாயாகப் படுகொலை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் தாராளமாக விற்கப்படுகிறது. கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் அதிகம் காய்ச்சப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசியுள்ளேன்.
எதற்காக சிபிஐ?: செவித்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகாதில் சங்கு ஊதுவது போல, இந்த அரசு அதை கேட்காமல் இருக்கிறது. நாங்கள் வைத்த கோரிக்கையை கேட்டு செயல்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகள் நடந்திருக்காது. இந்த அரசுக்கு இதை பற்றி கவலை இல்லை. இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். காவல்துறை, வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதை எவ்வாறு சிபிசிஐடி விசாரிப்பார்கள்?
அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும், அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். 3ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்படும், வெற்றி கிடைக்கும். திமுகவின் பெரும் புள்ளிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தில் நாங்கள் கேட்கும் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் முன்னர் பேரவைத் தலைவர் பதிலளிக்கிறார். சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “சபாநாயகர் என்னைப் பேச விடவில்லை”.. தவாக தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு! - TVK Velmurugan