தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. வெல்லமண்டி நடராஜன் வருகை!

தஞ்சையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தின் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்திலிங்கம் கோப்புப்படம்
வைத்திலிங்கம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

Updated : 2 hours ago

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

முன்னதாக, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2022ஆம் ஆண்டு முதற்கட்ட விசாரணை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதன்படி, வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் 28 கோடி ரூபாய் பணத்தை திட்ட அனுமதி வழங்குவதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம், வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தார். தற்போது ஒரத்தநாடு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தஞ்சை அருளானந்த நகர் விரிவாக்கத்தில் உள்ள வைத்திலிங்கம் மகன் பிரபு வீட்டில், 4 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் வந்தபோது பிரபு வீட்டில் இல்லாததால், அமலாக்க துறையினர் காத்திருந்தனர்.

பின்னர் தகவல் அறிந்த பிரபு, சொந்த கிராமத்தில் இருந்து கார் மூலம் அருளானந்த நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார். மேலும், அவரது வீட்டு வாசலில் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் திருச்சி வெல்லமண்டி நடராஜன் மற்றும் தொண்டர்கள் வெளியே காத்திருந்தனர். எனவே, வீட்டிலிருந்து வாசலுக்கு வந்த வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜனைச் சந்தித்து விசாரித்தார். பின்னர், அனைவரையும் நிற்க வேண்டாம், கலைந்து செல்லுங்கள் என்று அவர் ஆதரவாளர்களிடம் கூறினார்.

Last Updated : 2 hours ago

ABOUT THE AUTHOR

...view details