தமிழ்நாடு

tamil nadu

உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை.. களைகட்டும் பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு! - Muthamizh Murugan Maanaadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 7:26 PM IST

Updated : Aug 24, 2024, 7:47 PM IST

Muthamizh Murugan Maanaadu: பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு இன்று காலை துவங்கிய நிலையில், தற்போது ஏராளமான பக்தர்கள் வந்து முருகனின் 3D காட்சிகளைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

முத்தமிழ் முருகன் மாநாடு
முத்தமிழ் முருகன் மாநாடு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளானமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

2 நாள் கொண்டாட்டம்: முருனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கி நாளை வரை அருள்மிகு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் இங்கிலாந்து, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், முருகனின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் முருகன் வழிபாட்டு சிறப்புகள், இலக்கிய சிறப்புகள் குறித்து மாநாட்டில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. முருகன் வழிபாடு என்பது இந்தியா, இலங்கை, மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், மொரிசியஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது.

முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி:உலக முருக பக்தர்களையும், சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், முருக பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாநாடு துவங்கப்பட்டது முதல் அதிகளவில் பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை முருகன் புகைப்படக் கண்காட்சி மற்றும் 3D திரையரங்கில் முருகப் பாடல்களையும் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அதிகளவில் மக்கள் மற்றும் பக்தர்கள் மாநாட்டைக் காண வருந்துள்ளனர்.

குன்று போல் அமைந்திருக்கும் நுழைவாயில் முன்பு ஏராளமான பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மாநாட்டிற்கு வரக்கூடிய அனைத்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பிரசாத பைகள் வழங்கப்பட்டு வருகிறது. எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பழனியைச் சுற்றி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வந்த பக்தர்கள் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “ஆன்மிக அடியார்கள் மற்றும் தமிழ்த்துறை தலைவர்கள் ஆகியோரை வைத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முத்தமிழ் முருகன் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார். லட்சக்கணக்கானோர் இங்கு வருகை புரிந்துள்ளனர். பழனி திருத்தளத்தில் இந்த மாநாடு நடப்பது மிகவும் சிறப்பாகும்.

பல்வேறு அரங்கங்கள் மாநாட்டில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக 3D நிகழ்ச்சியில் முருகனை காண்பது சிறப்பாக உள்ளது. இந்த மாநாட்டிற்கு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆஸ்ரேலியா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்துள்ளனர். முருகன் சிறப்பு கொண்ட பழனியில் இந்த மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி. அறுபடை முருகனின் சிலையையும் மிகவும் சிறப்பான முறையில் வடிவமைத்துள்ளனர்” இவ்வாறு தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:இளநீர் இட்லி முதல் பருத்திப்பால் அல்வா வரை.. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கமகம விருந்து!

Last Updated : Aug 24, 2024, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details