திருச்சி:திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பீடி காலணியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி சம்சத் (55). அக்பர் அலி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சிராஜ் என்ற மகனும் நிஷா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. இந்த நிலையில் சிராஜ் கவரிங் நகை செய்யும் வேலை பார்த்து வருகிறார்.
அவருக்கும் ஆயிஷா பேகம் (22) என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் ஆயிஷா பேகம் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் இதற்காக மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அரிய மங்கலம் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், நேற்று மாமியார் மருமகள் குடும்பத்தினர் அனைவரும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஒடுக்கம்பட்டி தர்காவிற்கு சென்று மருமகளுக்கு கையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை மாமியார் மருமகள் இடையே தகராறு நிலவி வந்துள்ளதாக தெரிகிறது.
அப்போது தன்னுடைய கையில் இருக்கும் கயிறை கழட்டும்படி மாமியாரிடம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது மருமகள் ஆயிஷா கோபத்தில் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு மாமியார் சம்சத்தை இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் இரு கத்திகளால் குத்தியுள்ளார்.