சென்னை:புதுச்சேரியில் 1964 ஆம் ஆண்டு முன் பிறந்த பட்டியலினதவர்களுக்கு பூர்வகுடி பட்டியலினம் என்றும் மற்றவர்கள் புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர் என வகைப்படுத்தி பட்டியலின சாதி சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த பட்டியலின மாணவி ஸ்ரீநிஜா தொடர்ந்த வழக்கில்,"2024-2025 ம் ஆண்டு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக பட்டியலின பிரிவில் தகுதியான விண்ணப்பத்துடன் விண்ணப்பித்துள்ளார்.
அவர் புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர் பிரிவினருக்கான சாதி சான்றிதழ் பிரிவில் பங்கேற்றதால் அவருக்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடம் கிடைக்காமல், பல் மருத்துவ படிப்பிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் வில்லியனூர் தாசில்தார், ஸ்ரீநிஜாவுக்கு, அவரின் தாயாரின் ஆவணங்கள் அடிப்படையில் பூர்வீக பட்டியலினம் என்ற சாதி சான்றிதழை வழங்கினார்.
இந்த சாதி சான்றிதழின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி ஸ்ரீநிஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, "மருத்துவ படிப்பிற்கான இடங்களுக்கு கலந்தாய்வுகள் முடிந்து, தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு விட்டதால் தற்போது இடம் வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.