சென்னை: சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” என்ற திட்டத்தை ரூ.1,000 கோடி செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும், வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மார்ச், 2024ல் தங்கச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ் பதினோரு துறைகளை உள்ளடக்கி ரூ.4,378 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
வட சென்னையின் முக்கிய இடங்களில் மாதிரி பள்ளிகளை மேம்படுத்துதல், ஏற்கத்தக்க விலையில் வீடுகள், திறன் மேம்பாட்டு மையத்தை உருவாக்குதல், புதிய பேருந்து முனையங்கள் மற்றும் பணிமனைகளை தரம் உயர்த்துதல் மற்றும் கட்டுமானம், முக்கிய பகுதிகளில் துணை மின்நிலையங்களை நிறுவுதல், போதைப்பொருள் மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை அமைத்தல் போன்ற உட்கட்டமைப்பு கட்டுமானங்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின்கீழ், சிவசக்தி காலனியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் ரூ. 53.50 கோடி மதிப்பீட்டில், 1 லட்சத்து 25 ஆயிரத்து 402 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைதளத்தில் 64 கடைகளும், அலுவலக அறையும், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், முதல் தளத்தில் 70 கடைகளும், இரண்டாம் தளத்தில் உணவு விடுதி வளாகம் உட்பட 54 கடைகளும், மீன் வள அமைப்புகள் என மொத்தம் 188 கடைகளுடன் அமைக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்கப்பட்டுள்ளது.