மத்திய அரசை கண்டித்து போராட்டம் செய்த வழக்கு: விசிக எம்எல்ஏ உட்பட 6 பேர் விடுதலை! - VCK MLA BALAJI
மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தொடரப்பட்ட வழக்கில், விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தலித் மக்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முறையாக அமல்படுத்த வேண்டும். அவர்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசிக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த போரட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அனுமதியின்றி நடைபெற்ற போரட்டத்தில் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பாலாஜி, செல்லதுரை, செல்வம், அப்துல் ரகுமான், ஜெகன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்குதல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 6-ம் தேதி நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்படாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (பிப்ரவரி 20) தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி ஜெயவேல் தனது தீர்ப்பில், காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கவில்லை. எனவே, குற்றசாட்டின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அளித்து அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.