தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

" நான்கு முக்கிய நபர்களை வழக்கில் இணைக்க அமலாக்கத் துறை கட்டாயப்படுத்துகிறது" - ஜாபர் சாதிக் பரபரப்பு பதில்! - JAFFER SADIQ CASE

JAFFER SADIQ: சமூகத்தில் முக்கிய நபர்களாக இருக்கும் 4 பேரை இந்த வழக்கில் இணைக்க அவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என அமலாக்கத் துறை தன்னை கட்டாயப்படுத்தியதாக ஜாபர் சாதிக், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 10:01 PM IST

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், கடந்த மாதம் 26 ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில், ஜாபர் சாதிக்கை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறை மாற்று வாரண்ட் கோரி அமலாக்கத்துறை கடந்த மாதம் மனுத் தாக்கல் செய்தது. பின்னர், சிறை மாற்று வாரண்ட் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த சிறை மாற்று வாரண்ட மூலமாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஜாபர் சாதிக் இன்று (ஜூலை 15) ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், ஜாபர் சாதிக்கை கைது செய்வதற்கான உத்தரவும், 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரியும் அமலாக்கத்துறை தரப்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜாபர் சாதிக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி, ''சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் 24 மணி நேரத்தில் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. மேலும், போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே ஜாமீன் பெற்று விட்டார்.

இந்த நிலையில், ஜாபர் சாதிக் சிறை வாரண்ட் மூலமாக மீண்டும் கைது செய்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. இது சட்ட விரோதமானது. எனவே, அவருடைய கைதுக்கு அனுமதிக்க கூடாது. இந்த கைது சட்டவிரோதமானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மேலும், நீதிமன்றக் காவலுக்கு உற்படுத்தக்கூடாது'' என வாதிட்டார்.

அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, ''ஜாபர் சாதிக் கடந்த மாதம் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு ஜாபர் சாதிக் சிறையில் இருந்தபோது வழங்கப்பட்டது. மேலும், கைதுக்கான அனைத்து காரணங்களும் வழங்கி, மனுதாரர் கையொப்பமும் பெறப்பட்டது. எனவே, எப்படி அது சட்டவிரோத கைது என்ற கேள்வி எழுகிறது'' என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, இவ்வழக்கு தொடர்பான விபரங்களை ஜாபர் சாதிக்கிடம் தெரிவித்தார். பின்னர், வழக்கு குறித்து அமலாக்கத்துறை ஏதேனும் துன்புறுத்தல் செய்தததா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஜாபர் சாதிக், அமலாக்கத்துறை தன்னை ஏற்கனவே 3 நாள் காவலில் எடுத்து விசாரித்ததாகவும், சமூகத்தில் முக்கிய நபர்களாக இருக்கும் 4 நபர்களை இந்த வழக்கில் இணைக்க அமலாக்கத்துறை முயற்சி செய்வதாகவும், என்னிடம் அவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என கூறுவதாகவும், தன்னை அமலாக்கத்துறை திட்டமிட்டு துன்புறுத்துவதாக தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதி, வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும், 15 நாள்கள் அமலாக்கத்துறை நீதிமன்றக் காவல் கோரிய மனு மீதான விசாரணை நாளை (ஜூலை 16) நடைபெறும் என தெரிவித்தும், நாளைக்கும் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தமிழகத்தில் பிறமொழியினரின் பங்கு இவ்வளவா?.. 'தி லாங்குவேஜ் அட்லஸ் ஆஃப் தமிழ்நாடு' ஆய்வு சொல்வது என்ன? - Other Language Speakers in TN

ABOUT THE AUTHOR

...view details