சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பிறந்தவர் கே.ஆர்.ஸ்ரீராம். இவரது முழு பெயர் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மை, கணக்கியல் மற்றும் எல்எல்பி ஆகியவற்றில் பி.காம் படித்தார்.
அதனை தொடர்ந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து எல்எல்எம் (கடல் சட்டம்) முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் 1986 ஆம் ஆண்டு ஜூலை 3ம் தேதி மகாராஷ்டிரா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். அப்போது மூத்த வழக்கறிஞராக இருந்த எஸ்.வெங்கிடேஸ்வரனின் சேம்பரில் கே.ஆர்.ஸ்ரீராம் இருந்துள்ளார்.
கே.ஆர்.ஸ்ரீராம் வழக்கறிஞராக, 1997 ஆம் ஆண்டு முதல் கப்பல் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டங்களில் தனி நிபுணத்துவதுடன் வணிக விவகாரங்களை கையாண்டு வந்துள்ளார். குறிப்பாக, துறைமுக சட்டங்கள், சுங்கச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், கடல் காப்பீடு, நிறுவன சட்டம் ஆகியவற்றிலான விஷயங்களை கையாளுவதில் நிபுணத்துவம் கொண்டிருந்தார் கே.ஆர்.ஸ்ரீராம்.