தஞ்சாவூர்:மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் செல்கிறது. கடலில் கலக்கும் இந்த தண்ணீரை தேக்கி வைக்க எந்த நடவடிக்கையையும் திராவிட மாடல் அரசு செய்யவில்லை.
தமிழக மக்களிடம் பொய்களை பரப்புகின்ற திமுக ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் மோசமான நிலைக்குச் சென்று விடும். எனவே, திராவிட மாடல் திமுக அரசை அரசியலில் இருந்து வேருடன் அகற்ற வேண்டும். திமுக எம்பிக்களான தயாநிதிமாறன், கனிமொழி ஆகியோர் நாடாளுமன்றத்தில் பேசும் போது, தமிழக மக்கள் வரி செலுத்த வேண்டாம் என நாங்கள் கூறினால் என்னாகும் என பேசியுள்ளார்கள்.
நீங்கள் திமுக செயற்குழுவைக் கூட்டி சொல்ல வேண்டியது தானே, அப்படிச் சொன்னால் திமுகவும், தமிழக அரசும் இருக்காது. மேலும் தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர் பொன்முடி நிர்வாகத்தில் 292 கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் 10 கல்லூரிகளில் பேராசிரியராக உள்ளார். ஊழல் நிறைந்த ஒருவர் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தால் இது தான் நடக்கும்.