தமிழ்நாடு

tamil nadu

அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்ட விவாரம்: திருச்சியில் ஹெச்.ராஜா அளித்த விளக்கம் - H Raja on Annapoorna Srinivasan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 12:09 PM IST

அன்னபூர்ணா உணவக அதிபரே நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க விரும்பியதால் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரே விரும்பி தான் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டது தொடர்பாக பாஜகவிற்கும் நிர்மலா சீதாராமன் தரப்பிற்கும் எந்த பங்கும் இல்லை என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா
பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில மையக் குழு கூட்டம் நேற்று (செப்.13) திருச்சியில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹெச்.ராஜா, "மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தான் எந்த திட்டங்களாக இருந்தாலும் விரைந்து செயல்படுத்த முடியும். மத்திய அரசு வழங்கும் நிதியை செயல்படுத்தும் இடத்தில் மாநில அரசு தான் உள்ளது.

மத்திய அரசின் விஸ்வகர்மா நிதி உதவி திட்டத்தை இதுவரை மாநில அரசு வெளியிடவில்லை. வரும் 17ஆம் தேதி விஷ்வர்மா தினம். அந்த தினத்திற்குள் மாநில அரசு அரசிதழில் வெளியிட்டால், தொழிலாளர்களின் அமைப்பான விஸ்வகர்மாவைச் சேர்ந்தவர்களுக்கு பயனாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து கோவை அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "32 விதமான வரிகளை ஒன்றுபடுத்தி சரக்கு மற்றும் சேவை வரியாக ஒன்றிணைத்து, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே வெண்ணெய்க்கு வரி இருந்தது. ஜிஎஸ்டி விவகாரத்தில் சில கோரிக்கைகள் இருக்கலாம் அந்த கோரிக்கைகளை பரிசிலினை செய்ய அரசு தயாராக இருக்கிறது.

இதையும் படிங்க:பன் + க்ரீம் என புதிய விளம்பரத்தை வெளியிட்ட அன்னபூர்ணா ஹோட்டல்!

கோவை அன்னபூர்ணா உணவக அதிபரே நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க விரும்பியதால் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரே விரும்பி தான் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டது தொடர்பாக பாஜகவிற்கும் நிர்மலா சீதாராமன் தரப்பிற்கும் எந்த பங்கும் இல்லை" என்று பதிலளித்தார்.

அதன் தொடர்ச்சியா வி.சி.க மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டில் அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு என திருமாவளவன் கூறுவது அனைத்து இடங்களிலும் தனக்கான கதவு திறந்து உள்ளது என திமுகவிற்கு அழுத்தம் கொடுக்கும் யுக்தியாக பயன்படுத்தலாம் என நினைத்திருக்கலாம்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபின் ஒரு மதுக்கடையை கூட குறைக்கவில்லை. இது மட்டும் இல்லை மூன்று நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஆறு கொலைகள் நடந்தது. இவையெல்லாம் போதை தாக்கத்தின் காரணமாக தான் நடந்துள்ளது. தமிழகத்தை சீரழிக்க கூடிய ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் தற்போது உள்ளது" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details