தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர்: சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதிய பாக்மதி எக்ஸ்பிரஸ்.. மீட்பு பணி தீவிரம்!

மைசூருவில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ்(Bagmati Superfast Express) ரயிலானது, திருவள்ளூர் கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 9:41 PM IST

Updated : 23 hours ago

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்து
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்து (image credits-Etv Bharat)

திருவள்ளூர்: கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) இன்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், 6 பெட்டிகள் தரம் புரண்டதில் இரு ஏசி பெட்டிகள் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த ரயிலில் பயணித்தோர் பெரும்பாலானோர் வடமாநிலத்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளன. இந்த விபத்தில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் கொண்ட குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சென்னை சென்ட்ரலில் இருந்தும் சென்ற மருத்துவ வேன் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க :நடுவானில் திடீர் இயந்திரக் கோளாறு.. 2 மணி நேர திக் திக் பயணம்.. திருச்சி விமான நிலையத்தில் நடந்தது என்ன?

விபத்து நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் நாசர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இன்று காலை ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரயில் பாதையில் உள்ள பெட்டிகள் முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் இந்த பாதையில் ரயில் போக்குவரத்து சீரடையும்.

உதவி எண்கள் அறிவிப்பு: இந்த ரயில் விபத்தில் சிக்கிய தவிக்கும் பயணிகளுக்கு உதவி மைய எண்களை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது. அதன்படி பயணிகள் 044 25354151, 044 24354995 என்ற இரு எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை கோரலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல, தென் மேற்கு ரயில்வேயின், ஹுப்பள்ளி ரயில்வே கோட்டம் பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய பிரிவுகளுக்கான உதவி மைய எண்களை அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூரு பிரிவுக்கு உதவி கோரும் பயணிகள் 8861309815 என்ற எண்ணையும், மைசூர் பிரிவுக்கு உதவி கோரும் பயணிகள் 9731143981 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை கோரலாம் என அறிவித்துள்ளது.

இதுமட்டும் அல்லாது, கேஎஸ்ஆர் பெங்களூரு, மாண்டியா மற்றும் கெங்கேரி நிலையங்களிலும் உதவி மையங்கள் உள்ளன என்றும், மேலும் மைசூர் ரயில் நிலையத்திலேயே உள்ள உதவி மையத்தை 08212422400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவையில் பாதிப்பு:விபத்து காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயில், சென்னையில் இருந்து கோவை செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 23 hours ago

ABOUT THE AUTHOR

...view details